Monday, November 7, 2011

தடுமாற்றம்


அன்பென்ற மூன்றெழுத்தி்ல்
ஆசையாய் இணைந்த இதயம்
பாசம் என்ற கடலிலே
நட்பென்ற முத்தெடுக்க
நீச்சலடிக்க தொடங்கையிலே
பிரிவென்ற பேரலை
சுனாமி போல வந்திங்கே
நட்புக்கொண்ட நெஞ்சங்களை
தடுமாற வைக்கிறது

Friday, November 4, 2011

பிரிவின் முகவரி


பௌர்ணமி நிலவான
உன் சிறு முகம்
அதில் பால்கடல் போன்ற
உன் விழி வெண்படலம்
மென்மையாய் கதை பேசும்
உன் கரு விழிகள்
இத்தனையும் இன்று
ஆயிரம் அர்த்தங்களுடன்
ஆதங்கமாய் கேட்கின்றன
நம் பிரிவின் முகவரியை!

Wednesday, November 2, 2011

என் ஆசை


இனியவளே!
உன்னை
பார்த்த நொடி முதல்
ஆயிரம் ஆசைகள்
அத்தனையும் உனக்காய்
அன்பு வரிகளில்!

குழந்தையாய் உன்னோடு
குதூகலித்திட ஆசை
கொட்டும் அருவியில்
குளித்திட ஆசை!

மாலை பொழுதிலே
மடிசாய ஆசை
மட்டில்லா மகிழ்ச்சியில்
திழைத்திட ஆசை

கடற்கரை மணலிலே
கைகோர்த்திட ஆசை
கானல் நீரெல்லாம்
நிஜமாக ஆசை

நிலவின் ஒளியில்
நின் முகம் காண ஆசை
நட்சத்திரங்களை எண்ணி
முத்தமிட ஆசை

தோழமை கொண்டு
தோள் சாய ஆசை
தோன்றிய கனவுகள்
நனவாகிட ஆசை

எத்தனையோ ஆசைகள்
எண்ணத்தில் தோன்றிட
அத்தனையையும் உள்ளத்தில்
ஆசையாய் அடக்கினேன்

அன்பே உன்னை
கைபிடிக்கும் நாளிலே
மொத்தமாய் உன்னில்
முழுமையாய் சரணடைவேன்

Monday, October 31, 2011

முத்த மழை


நினைவுகளோடு வாழாதே
நிஜமாக வந்து விடு

இனியுள்ள வாழ்வுதனை
இனிமையாக்கி சென்று விடு

சுட்டெரிக்கும் வெயிலிலும்
இத்தனை குளிர்மையா?

அத்தனையும் உந்தன்
ஆசையுள்ள முத்த மழை

நனைந்தேன் உன் மழையினிலே
இழந்தேன் என் நினைவுதனை

உன்னோடு இங்கு நனைந்திட ஆசை
அத்தனையும் உந்தன் முத்தமழையினிலே

எப்படி நனைந்தாலும் சலிக்கவில்லை
உன்னுடனான முத்தக் குளியல் மட்டும்!

Saturday, October 29, 2011

அவமானச் சின்னமாய்!


அன்னையே!
அன்று நீ
அவமானச் சின்னமாய்
தூக்கி போட்ட உன் உறவு
இன்று
அநாதை எனும் பெயரோடு
அவனியில் வாழ்கிறது
கண்டும் காணாதது போல்
காலத்தை போக்கிறாயா?
இன்னும் என் நினைவோடு
ஏக்கமாய் வாழ்கிறாயா?
உனக்கான வருகைக்காய்
பூவோடு உன் பூ இங்கே!

தவிக்கிறது மனது


நாம் பிரியப்போகும்
தருணங்களை எண்ணி
தடுமாறும் மனதோடும்
விழிபார்க்க முடியா
விடைபெறும் நிமிடங்களை
வலியோடு நினைத்தும்
தடுமாறுகிறது மனது
தடுக்க வார்த்தை தெரியாது
தவிக்கிறது மனது
புரிவாயா அன்பே!

Friday, October 28, 2011

காற்று பட்ட கற்பூரமாய்

கனவுகளை சுமந்து
கற்பனைகளுடன் வளர்த்த காதல்
காற்று பட்ட கற்பூரமாய்
கணபொழுதில் மறையுமென
கனவில் கூட நினைக்கவில்லை

கரைந்து விட்ட கற்பூரமோ
கமகமக்கும் சுகந்தமுடன்
காற்றிலே மறைந்தது
காதலின் நினைவுகளோ
காயங்களை தருகிறதே!

காதலே உன்னை
கற்பூரமாய் பார்க்க
கடைசி வரை முடியவில்லை
காயத்திற்கு மருந்திட
கனவுகளோடு வாழ்கிறேன்!

Wednesday, October 26, 2011

நட்பின் வேண்டுகோளுக்காய்


என் நட்புக்கு கிடைத்த
இனிய நட்பே!
நட்பால் நட்பான
நட்பை பற்றி
நான் கூற வார்த்தைகள்
நாட்கணக்காய் தேடினேன்
வார்த்தைகளும் கிடைக்கவில்லை
கவிதையும் கிடைக்கவில்லை
காரணத்தை மட்டுமிங்கு
கவியாக சொல்கிறேன்
உனக்காய் ஓர் கவிதை
உதிக்கையில் எழுதிடுவேன்
நட்போடு காத்திரு
நட்பின் கவிதைக்காய்!

Sunday, October 23, 2011

நானும் ஓர் கவிஞன்


அன்பின் உறவிற்கு
ஆசையாய் கவிதை எழுத
இம்சை செய்யும் உணர்வுகளை
பத்திரமாய் கழற்றி விட்டு
மாடிப் படியிலே
மல்லாந்து சாய்ந்திருந்தேன்!

நினைத்து பார்க்கையில்
நீண்டு சென்ற கற்பனைகளை
நிரற்படுத்த முடியாமல்
நிதானம் தனை இழந்து
நிலை தடுமாறிய நான்
நிலத்திலே வீழ்ந்து விட்டேன்!

எழுந்து பார்க்கையில்
எனைச் சுற்றி பலர்
ஏளனம் செய்தபடி
கைகொட்டிச் சிரித்தனர்
முடியா வேலைக்கு முயற்சி என
வசை மொழி பாடியபடி!

எனக்குள்ளும் ஓர் ஆசை
என்றோ ஓர் நாள்
அத்தனை கைகளும்
கைதட்டி பாராட்ட
நானும் இவ்வுலகில் ஓர்
நல் கவிஞனாக வேண்டுமென!

ஆசைகளை தேக்கி வைத்து
அப்பப்ப கிறுக்கி வைக்கும்
ஐந்தாறு வரிகளினை
கவிதை என்ற பெயரினிலே
மேடையேற்றி வருகிறேன்
நானும் ஓர் கவிஞன் என!

Friday, October 21, 2011

வாழ்வின் அனுபவம்


பள்ளிப் பருவத்தில்
சிட்டுக்குருவியாய்
சிறகடித்து வாழ்ந்து விட்டேன்!

பல்கலை வளாகத்தில்
பகிடிவதைகளோடும்
சிலகாலம் வாழ்ந்துவிட்டேன்!

பெற்றவர் பாசத்தோடும்
பெரியவர் நேசத்தோடும்
பலகாலம் வாழ்ந்து விட்டேன்!

வெற்றியின் வாசலுக்கு
படிக்கற்கள் அமைத்துவிட்ட
பாசங்களையும் பார்த்து விட்டேன்!

கல்வியின் சிறப்போடும்
பதவியின் புகழோடும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

தோளோடு தோள் கொடுத்து
தூக்கி நிறுத்தி பார்க்கின்ற
உறவுகளையும் கண்டு விட்டேன்!

நண்பர்கள் கூடி நின்று
நயமாக பேசியும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

உறவுகளின் உள்ளத்தால்
உதாசீனம் செய்யப்பட்டும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

காதலின் உணர்வோடு
காதலன் கைபற்றி
சிலகாலம் வாழ்ந்துவிட்டேன்!

காதலின் வெற்றியால்
கணவனின் துணையோடு
சில காலம் வாழ்ந்து விட்டேன்!

மட்டில்லா மகிழ்ச்சியில்
மனதுக்கு பிடித்த உறவுகளுடன்
துள்ளி மகிழ்ந்து பார்த்து விட்டேன்!

சொல்லொனா துயரத்தில்
விம்மி விசும்பி அழுது
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

நினைத்தாலே இனிக்கும்
நீளமான நினைவுகளுடன்
நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன்!

நினைத்தாலே கசக்கும்
நினைவுகளையும் சுமந்து
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

நினைக்க நினைக்க
நிம்மதி தரும் நினைவோடும்
நீண்டகாலம் வாழ்ந்து விட்டேன்!

நினைத்துப் பார்த்தாலே
நீர் மல்கும் விழிகளோடும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

வாழ்க்கை சக்கரத்தில்
வசந்தம் முதல் வாட்டம் வரை
வாழ்ந்து நான் பார்த்து விட்டேன்!

இந்த நொடி என்றாலும்
இறப்பு வந்து அழைத்து நின்றால்
இனிதாக சென்று விடுவேன்!

Thursday, October 20, 2011

அவசர காத்திருப்பு


பாவையே உன்
பாசம் தனை வேண்டி
பனிக்கட்டி பாலம் மேல்
பரிதவிப்பாய் காத்திருக்கும்
புண்பட்ட உள்ளம் நான்!

பாசமாய் வந்து
பக்குவமாய் கைகோர்த்து
வாழ்க்கை பாதையில்
அரவணைத்து செல்வாயா?

பகலவன் வந்து
பனிக்கட்டி உருகிட
பாழான கடலினிலே
உயிர்மடிய செய்வாயா?

புகை மோதி இந்த
புவிதனில் விரிசல்கள்
வந்துவிட போவதில்லை
பூவையே என் கை பற்றி
புதுவாழ்விற்கு வந்துவிடு!

Wednesday, October 19, 2011

கற்பனை பூக்கள்

கற்பனைப் பூக்களை
கவிதை எனும் மாலையாக்கி
கனவுகளிற்கு சூட்டிவிட
கையிலே பேனாவும்
கால்துண்டு பேப்பருமாய்
காத்திருந்து பார்க்கிறேன்!
கவிதையும் வரவில்லை
கனவுகளும் பலிக்கவில்லை
கையிருந்த தாள் மட்டும்
காற்றோடு சேர்ந்தங்கே
கையசைத்து பறந்தது
மைவற்றி போன பேனா
கண்ணீரை மையாக்கி
கன்னங்களில் கோலமிட்டு
கவலையை வரைந்தது!

Sunday, October 16, 2011

எதனால்?


அன்று
அத்தனை பசுமையாய்
இனிமையுடன் செளிப்பாய்
இருந்த உன் வாழ்க்கை
இன்று
இத்தனை வறட்சியாய்
பாலைவனம் போன்று
பசுமை இழந்து போனது
எதனால்?

Wednesday, October 12, 2011

இதயத் துடிப்பு


இறந்து விட துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
இடைவிடாது தடுக்கும்
இதயபூர்வ உறவுகளின்
இனிய நினைவுகளும்
இழக்க முடியா பாசமும்
இன்னும் இவ்வுலகில் என்
இதயத் துடிப்பை நகர்த்துகிறது

Sunday, October 9, 2011

இளங்காலை பொழுது


வானிலே நின்று
சில்மிசமாய் கண்சிமிட்டும்
அந்த விடிவெள்ளி

விடைபெற காத்து
விட்டு விட்டு மறையும்
அந்த முழு நிலா

பற்பல இசையிலே
பாடி எழுகின்ற
அந்த பறவைகளின் ஓசை

புலந்திடும் பொழுதிற்காய்
புத்துணர்ச்சியாய் கூவுடும்
அந்த சேவலின் ஓசை

புற்களின் மேலிந்து
புவியை விட்டு அகலவிருக்கும்
அந்த பனித்துளிகள்

கதிரவன் வருகைக்காய்
கனிவோடு காத்திருக்கும்
அந்த தாமரை மலர்கள்

ஓரெல்லாம் கேட்கும் படி
நாதமாய் ஒலி எழுப்பும்
அந்த கோயில் மணி

கல கல ஓசையுடன்
சாலையை கடந்திடும்
அந்த காளை மாட்டு வண்டிகள்

கண் குளிர் ஆடையுடன்
பரிசுத்த மனதான
அந்த பள்ளி செல் மாணவர்கள்

கடமையின் நிமித்தம்
வாகனங்களில் விரையும்
தொழிலாளர் கூட்டம்

இத்தனையும் இங்கே
இனிமையாய் வரவேற்றது
இளங்காலை பொழுதை!

பசுமையான மனது

பார்க்க துடிக்கும்
பரந்த தேசம் எங்கும்
பச்சை பசுமை வெளிகள்
பார்த்து மகிழ அல்ல
பறந்து திரியவும் ஆசை
இறைவா எனக்கும்
இறக்கைகள் கொடுத்து விடு
இவ்வுலகில் இனிய
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிவதற்கு!

Saturday, October 8, 2011

எப்படி போடுவது?


நீ
கவிதை எழுதியிருந்தால்
நானும் பதிலுக்கு
கவிதை எழுதியிருப்பேன்
நீயோ உன்கவலைகளை
தொகுத்தல்லவா எழுதிவிட்டாய்
எப்படி பதில் எழுத
என் கவலைகளை தொகுத்தா?
இல்லை என் மௌனங்களே
உனக்கு பதிலாகவா?

Wednesday, October 5, 2011

எப்படி சொல்ல?


கைகோர்த்து கதைபேசி
காலாற நடந்த
அந்த கடற்கரை மணல்!

தோழோடு தலைசாய்த்து
துன்பத்தை பகிர்ந்திருந்த
அந்த புல்வெளி!

காதலாய் கைப்பிடித்து
கனிவாக கவி சொன்ன
அந்த ஒற்றை மரத்தடி!

கச்சிதமாய் கட்டியணைத்து
களங்கமின்றி முத்தமிட்ட
அந்த குளு குளு கன்னங்கள்!

நினைத்ததெல்லாம் நடக்க என
பக்தியுடன் வழிபட்ட
அந்த கோயில் மண்டபம்!

குளு குளு கதை பேசி
குதூகலித்து குடித்திருந்த
அந்த ஐஸ்கிறீம் பாலர்!

மனதோடு மகிழ்ந்திருந்து
மழையில் நனைந்து பயணித்த
அந்த ஒற்றை வழி தெரு!

அத்தனையும் கேட்கிறது
உன்னவள் எங்கே என
ஏளனமாய் சிரித்தபடி!

எப்படி நான் சொல்ல
என்னவள் எனைவிட்டு
எங்கோ சென்று விட்டாள் என!

Sunday, October 2, 2011

உன் பார்வை


அழகாய் வருடிய கூந்தல்
ஆங்காங்கே காற்றினால்
சற்றுக் கலைந்த கூந்தல்
நிலவு போன்ற வதனம்
நிலைதடுமாற்றும் சிற்றிதழ்கள்
தடுமாற்றமான உன்
குறுகுறு பார்வை
எல்லாமே சொல்கிறது
அழகின் தேவதை நீ என
இருந்தும் புரியவில்லை
உன் நெஞ்சில் உள்ளதா
என் மீது காதல் என!

Saturday, October 1, 2011

இது தான் காதலா?


அந்தி சாயும் நேரம்
அழகிய நிலவொளி
அமைதியான மொட்டைமாடி
அன்பு செய்யும் உள்ளங்கள்
அழகோ கொள்ளை அழகு!

உணர்வுகளின் துண்டுதலால்
காதலித்த உன்னை
உணர்ச்சிகளின் தூண்டுதலால்
அத்துமீற விரும்பவில்லை
அது தான் தமிழ் பண்பாடு!

நாகரீகம் மாறலாம்
நடையுடையும் மாறிடலாம்
நம் தொன்று தொட்ட
பண்பான பண்பாட்டை
புண்ணாக்கிட முடிந்திடுமா?

காதலில் ஜெயிப்பதெல்லாம்
காலம் காலமாய் இருக்கிறது
கண்ணியத்தில் ஜெயித்துவிடு
காதல் மட்டுமல்ல
சுற்றமும் உன்னை
தயக்கமின்றி தலைவணங்கும்

எப்படி முடியும்


என்றோ ஓர் நாள்
என்னை விட்டு நிரந்தரமாய்
இதயத்துடிப்பு நின்றுவிட
பிரிய இருக்கும் என் உயிரே
உன்னை
இன்றே துறந்து விட
மட்டற்ற ஆசை தான்
இதோ இறந்தே விடுகிறேன்
நீ இருக்கும் இதயத்தை
இறுக்கமாய் பற்றியபடி!

Thursday, September 29, 2011

யாருமின்றி


அந்த ஒற்றை பனைமரம்
அருகில் யாரின்
துணையுமின்றி
மெல்லிய காற்றின்
நட்பான துணையோடு...!
தன்னை சுற்றி ரீங்காரமிடும்
அந்த சிறு பூச்சிகளின்
ஓசையை ரசித்தபடி!

Wednesday, September 28, 2011

அந்த ஒரு நொடி



பழகிய பலருக்குள்
புரிந்த சில உறவுகளின்
உண்மையான அன்பும்
எதிர்பார்த்த பாசமும்
உயிரான புரிந்துணர்வும்
ஒரு நொடி பொய்த்தாலும்
பல நாட்கள் இங்கே
பார்த்து பார்த்து பழகிய
அத்தனை இன்பமும்
அந்த நொடிப் பொழுதினிலே
கை தவறி வீழ்ந்து விட்ட
கண்ணாடிக் குவளை போல
துகழ்களாய் நொருங்கிவிடும்.

Tuesday, September 27, 2011

எப்படி புரிய வைப்பேன்



உன்னை பார்க்க மறுக்கும்
கண்களுக்கும்
உன்னோடு பேச மறுக்கும்
உதடுகளுக்கும்
உன்னை தேட மறுக்கும்
இதயத்துக்கும்
உன்னை தீண்ட மறுக்கும்
ஸ்பரிசங்களுக்கும்
எப்படி புரிய வைப்பேன்
நீ தான் என் வாழ்க்கை என்று!

Sunday, September 25, 2011

முயற்சிக்கவில்லை

விடை தெரியா வினாவாக
ஆயிரம் கேள்விகள்
விடைபெற நினைக்கையில்
விழிகளில் சங்கடம்
பிரிவுகளை எண்ணி
பிழிகிறது மனது
மௌனங்களை இங்கு
மொழி பெயர்க்க ஆசை
இருந்தும் முயற்சிக்கவில்லை
சோகத்தின் வாசலை
மொழிபெயர்த்து அறிவதில்
ஏன் தான் ஆர்வம் என!

Thursday, September 22, 2011

காதலின் காத்திருப்பு


பனி விழும் மலைச்சாரல்
பட்டுத் தெறிக்கும் மழைத்துளி
சில்லென்ற பரந்த வெளி
சிலிக்க வைக்கும் கூதல் காற்று
சிற்றிடையாளின் காத்திருப்பு
சிறிதான ஏக்கத்துடன்!

குளிர்சாதன பெட்டியிலிருந்து
சற்று முன் எடுத்து வைத்த
தண்ணீர் போத்தலை போல்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
மாதவளின் வதனமெங்கும்
மெல்லவே துளிர்த்தது!

இத்தனைக்கும் காரணம்
இனியவனின் வருகைக்கான
இதமான காத்திருப்பு
இருந்தும் இதயமெங்கும்
இனம் புரியா தவிப்பு
இடையிடையே இருப்பது தான்

அடிக்கடி அவள் பர்வை
கடிகாரத்தின் முட்களை
ஆதங்கமாய் நோட்டமிட
காத்திருப்பு தொடர்ந்தது
காதலன் வருகைக்காய்
நிமிடங்களை எண்ணியபடி
சற்றே கோவத்துடன்!

இடையினை தழுவிய
இதமான அணைப்பினால்
இலாவாக திரும்பியவளை
இனிக்கும் முத்தங்களால்
தாமத்தின் காரணத்தை
மௌனமாக பகிர்ந்து நின்றான்!

எத்தனை தான் ஊடல் அங்கு
எட்டி நின்று பார்த்தாலும்
இனியவனின் அணைப்புக்குள்
அத்தனையும் அங்கிருந்து
கதிரவனை கண்ட
பனிதுளி போல
காற்றாக பறந்தது
காதலுக்கு மட்டும் தான்
கண்டிப்பாய் இது சாத்தியம்!

Tuesday, September 20, 2011

வளர்ச்சி வேகம்



இனிய உறவே!
உன் நினைவின்
வளர்ச்சி வீதம்
பங்கு சந்தையை விட
வேகமாக அதிகரித்து செல்கிறது
இருந்தும் நீ
அருகிருக்கும் தூரம்
பணத்தின் இன்றைய
அன்னிய செலாவணி
வீத்த்தினைப் போல்
குறைடைந்து வருகிறது.
நம் உறவுக்குள்ளும்
ஆரம்பித்து விட்டதா
ஏற்ற இறக்கமான
தூர இடைவெளிகள்?

நியாயமா?


அன்பே!
உனக்குள் நான் இருப்பதாய்
உண்மையில் நீ கூறுவது
இன்று தான் தெரிந்தது
என்னை நனையாமல் காக்க
உனக்கு குடை பிடித்த போது!
இருந்தும் நீ நனைகிறாயே
எனக்குள் இருந்து
பயப்படாதே என் உறவே
உனக்கு காய்ச்சல் வந்தால்
நான் மருந்து போடுகிறேன்!

Monday, September 19, 2011

புரியாத புதிர்


அன்புத் தோழியே!
கை கோர்த்து கவி பாடி
கண்ணாலே கதை பேசி
மௌனங்களையே மொழிபெயர்த்து
மகிழ்ந்து நாம் இருக்கையில்
மனங்களை நொருக்கிட
நமக்குள் வரவிருக்கும்
நீண்ட பிரிவை எண்ணி
நித்தமும் மனமுடைந்து நம்
நிமிடங்கள் கரைகிறது!
புரிந்திட முடியாத ஓர்
புதிராக உள்ளது நம் நிலை!

Saturday, September 17, 2011

நினைவெல்லாம் நீயாக!


நான் விலகி விட நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்
விரும்பியே வந்து உன்
நினைவுகளால் வாட்டுகிறாய்!

நினைவுகளை எண்ணி
நினைவிழந்து நிற்கையில்
நிஜமாகவே வந்து என்னை
நின் மடியினில் சாய்க்கிறாய்!

நினைவாக்கி கொள்ளவா?
நிஜமாக்கி வாழவா?
நினைவிழந்து நிற்கிறேன்
நினைவெல்லாம் நீயாக!

Friday, September 16, 2011

என் மனதை போல்

பாலைவனம் போன்ற அந்த
பரந்து விரிந்த சமவெளி
என் மனதை போன்றே
சலனங்கள் ஏதுமற்று!
இடையிடையே நிமிர்ந்து நிற்கும்
அந்த ஒற்றை மரங்கள்
மெல்லிய காற்றுக்கு
மெதுவாக தலையசைத்த படி
சோகமே முகவரியான
என் மனமெனும் தோட்டத்தில்
இடையிடையே எட்டிப் பார்க்கும்
பசுமையான என்
பழைய நினைவுகள் போல்!

Saturday, September 10, 2011

செப்ரெம்பர் 11



இரட்டை சகோதரராய்

கைகோர்த்து கதை பேசி

இறுமாப்புடன் நின்று

ஆயிரம் உறவுகளை

அன்போடு எம்மில் தாங்கி

களிப்புடன் இருந்த நம்மை

காலனவன் வந்து

நொடி கூட இரக்கமின்றி

நொருக்கி விட்டு சென்று விட்டான்



நாம் உலகை விட்டு

தொலைதூரம் பிரிந்து சென்று

இன்றோடு முழுமையாக

பத்தான்று பறந்தாலும்

எம்மை நினைவு கூற என

எத்தனையோ உள்ளங்கள்

இன்றும் இவ்வுலகில்

வாழ்ந்து கொண்டு உள்ளன.


உலகையே உலுக்கி நிற்கும்

எம் இருவரின் அழிவும்

மூவாயிரத்திற்கும் மேலான

மனிதர்களின் இறப்பும் கூட

தீவிரவாதத்தை அழிக்கவில்லை

நம் அழிவில் கூட இந்த

நானிலம் திருந்த வில்லை

எம் அழிவுக்கு அரசு இட்ட பெயர்

செப்ரெம்பர் 11 தாக்குதல் என

செத்தும் வாழ்கிறோம் பலர் மனங்களில்



எம்முள் வாழ்ந்த காரணத்தால்

எம்மோடு சேர்ந்திங்கு

எமனால் குடிக்கப்பட்ட

அத்தனை உறவுகளின்

ஆன்மா சாந்தியடைந்து

அமைதி பெற அந்த

ஆண்டவனை வேண்டுகிறோம்

இனியாவது இவ் உலகில்

தீவிரவாதம் ஒழிந்திட

பிரார்த்திப்போம்!