Sunday, March 27, 2011

பலவிதம்

பூமியில் பூக்கின்ற
பூக்களோ பல விதம்
பூக்களின் மகரந்தம்
வெவ்வேறு நறுமணம்
பூக்களை பறிக்கின்ற
மனிதரோ சில ரகம்
மனிதரில் மறைந்திருக்கும்
குணங்களோ பல ரகம்
மனிதரை அறிந்திட
மார்க்கங்கள் உண்டா?
மனித குணங்களை ஆராய
வழிகள் தான் உண்டா?

Tuesday, March 22, 2011

மானிடா

மானிடா!

சற்றே சிந்தித்து பார்

இங்கு நான் சொல்வது

புதிய கதையல்ல

புராதன காலம் முதல்

பூவுலகில் கூறிவரும்

பாரம்பரிய கதையே!


அன்று ஆண்டவனால்
ஆண் உருவாகினான்

பூமியின் சொத்தான

மண்ணில் இருந்து

புதுப் பொலிவுடன்

உயிரும் கொடுக்கப்பட்டான்

அவனே ஆதாம்!


சற்றே சிந்தித்த இறைவன்

ஆடவனே உன்

தனிமையை போக்கிட

உன் விலா என்பெடுத்து

ஆக்கிவைத்தான் பெண்ணவளை

உயிரும் கொடுத்தான்

உணர்வு பூர்வமாய்

அவளே ஏவாள்!


உன் நெஞ்சினிலிருந்து

உருவாகிய பெண்ணை

உன் நெஞ்சுக் கூட்டினுள்

காத்திட மாட்டாயா?

பெண்ணடிமை ஒழித்து

பேதமை போக்கி

பெருவாழ்வு கொடுத்திடு

பெண்ணினம் வாழ்ந்திட!

Monday, March 21, 2011

அன்புக் காதலே!

பள்ளிக் காலத்தில்
பருவ மங்கைகள்
பலரை சந்தித்தேன்
பாசமான தோழியாக!

பல்கலை வளாகத்தில்
பாவையே உன்னை
பார்த்ததும் மயங்கினேன்
பறிகொடுத்தேன் இதயத்தை

மோகினியே உன்னுடன்
மோத நான் தயாரில்லை
மெதுவாக உன் மனதில்
மொத்தமாய் இடம் பிடிப்பேன்

அதுவரை அமைதியாய்
அடக்கி வைப்பேன் ஆசைகளை
அன்பினால் ஆகாதது
அவனியில் ஏதுமில்லை

ஆசை நாயகியே!
ஆதாம் ஏவாள் முதல்
நாகரிக காலம் வரை
ஆசை கொள்வதன் பெயர்
அன்புக் காதலே!

காதல் செடி

என் காதலே!
நாம் காதலித்த காலத்தில்
காத்திருந்த மரம் கூட
நம் காதல் மொழி கேட்டு
காதல் சின்னமாய்
கனிவாக வளர்ந்திட
நீ மட்டும் இன்று
எனை மறந்து
போனதெங்கே?

Saturday, March 19, 2011

காதலித்த காரணத்தால்

அன்று
பள்ளி பருவத்தில்
பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்
பருவ மங்கை என்னை
பார்த்த்தும் காதல் செய்தாய்

சிட்டுக் குருவியாய் என்னை
சிறகடித்து பறக்க வைத்தாய்
கடற்கரை மணலிலே
காதல் மொழி பொழிந்து
கைகோர்த்து வலம் வந்தாய்

நம் படிப்பு முடிந்தும்
வாழ்க்கையை எண்ணி
வாய் விட்டேன் திருமணத்திற்காய்
காரணங்கள் பல சொல்லி
காலம் தாழ்த்தி நின்றாய்

பொறுமையாய் காத்திருந்தேன்
பொறுப்பான உன் பதவிக்காய்
பதவியும் கிடைக்க
பறந்தாய் புகழின் உச்சிக்கு
பூரித்தேன் உன் நிலை கண்டு

பக்குவமாய் வந்து உன்
பெற்றவளிடம் மணம் பேச
உன் பதவிக்காய் சீர் கேட்டு
பாசத்தை விலை கேட்டாள்
சீதனம் எனும் பேரில்!

பாசத்தை விலை கேட்ட
பாசமான உன் தாயிடம்
போராட வழியின்றி
பலிக்கடா ஆனது என்

பள்ளிக்காலத்து காதல்

பணத்திற்காய் பாதை மாறிய
பாசாங்கு காதலனே
நீ இன்று குதூகலமாய்
புதிய வாழ்க்கை துணையுடன்
நான் மட்டும் இங்கு
முதிர் கன்னியாய்.........!

Friday, March 18, 2011

உன் குழந்தையாக

அன்பே!
அதிகமாக எனக்கு
ஆசை ஒன்றும் இல்லை
நான் உன் நட்பாக
இருக்க விரும்பவில்லை
உன் கையில் குழந்தையாகவே
இருக்க ஆசை!
நீ என்னை நேசிப்பதை விட
உன் குழந்தையையே அதிகம்
நேசிக்கிறாய்!

Thursday, March 17, 2011

உன் மடல்


அன்பே உன் மடல் கண்டு

ஆவலாய் பிரித்திடவே

ஆசையாய் ஓடினேன்

பிரித்த பின் புரிந்தேன்

அது உன் அன்பு மடல் அல்ல

நம் காதலின் முடிவிற்கான

விவாகரத்து அட்டை என!

ஆம்!

அது தான் உன் அழகான

திருமண அழைப்பிதழ்!

உண்மை மறந்து

பொய்யான இவ்வுலகில்

மெய்யாக உனை காட்டும்

மாயபிம்ப கண்ணாடியில்

மணிக்கணக்காய் அழகு பார்த்து

பாதி வழியில் நின்று

பள்ளி செல்லும் புள்ளி மான்களை

பகடி வதை புரிகிறாயே

உனை பெற்றவளும் பெண் தான்

உன் உற்றவளும் பெண் தான்

உடன் பிறப்பும் பெண் தான்

என்ற உண்மை மறந்து..........!

Tuesday, March 15, 2011

பொறுமையோடு நீ இருந்தால்

மானிடரே!

உங்களிடம் ஓர்

உருக்கமான கேள்வி

சேமிக்கும் நற்குணம்

உள்ளதா உங்களிடம்?

நான் இப்போ கேட்பது

பணத்தை அல்ல!

குணத்தை மட்டுமே!

பொறுமை என்ற

பெரும் செல்வத்தை

சேமித்து தான் உள்ளீரா?

தண்ணி மேல் கூட

தயக்கமின்றி நடக்கலாம்

ஆம்

அது பனிக்கட்டி ஆகும் வரை

பொறுமையோடு நீ இருந்தால்......!

இனியவளே...!

மெல்லிய காற்றினிடை
மென்மையான பூக்களின்
மெதுவான ஆட்டம் பார்த்து
மெல்லிடையாளே உன் நினைவு
மெதுவாக அலை மோதும்

காந்த கண் பார்வையும்
கண் சிமிட்டும் உன் சிரிப்பும்
காண்பவர் மனதையெல்லாம்
கண்டவுடன் கொள்ளை கொள்ளும்

துரு துரு குறும்பும்
துள்ளித் திரியும் பாதமும்
தூக்கத்தின் போது கூட
துவம்சங்கள் பல செய்யும்

கன்னி உன்னை காண எண்ணி
காத்திருந்த காலம் போய்
இன்று என் கைக்குள்ளே
இனிய இல்லத்தரசியாய்....!

Sunday, March 13, 2011

அமைதியை தேடி..........!

அமைதியை இழந்த நாம்
அமைதி தேடி
ஆண்டவனே உன்
சந்நிதி வந்தோம்
உன் ஆலய அமைதி கூட
எம் அமைதியை கலைக்குமென
அங்கு வந்து தான்
புரிந்தது!

சலனப்பட்டது ஏனோ?

அன்பே!
அழகாய் ஆரம்பித்த
அற்புதமான நம் பயணம்
அமைதியாய் தானே
இருந்தது!
அத்தனை நிமிடங்கள்
அமைதியாய் இருந்த
நம் மனது
சிறு அழுகுரல் கேட்டு
சலனப்பட்டது ஏனோ?
இத்தனை நாட்கள்
இனிமையாய் வழியனுப்பிய
உன் விழிகள்
வார்த்தைகள் இன்றி
தடுமாறியதேனோ?
நம் பயணத்தின் போது
பகிரப்பட்ட நம் மனங்கள்
இன்றைய பயணத்தில்
மௌனமாக்கப்பட்டது ஏனோ?
இன்று நம் பயணத்தில்
வார்த்தைகளை விட
மௌனங்களுக்கே
வலிமை கூடிவிட்டது!

Thursday, March 3, 2011

புதிய உதயம்

இன்று உன் வாழ்வு
புதிதாய் உதயம்
உனக்கென்றோர் உறவு
உயிரோட்டமாய் உன்னிடம்
உயிருள்ளவரை வாழ்ந்து விடு
உன் உயிரின் உயிருக்காய்!
ஊமையான என் விழிகள்
உருக்கமாய் உனை வாழ்த்தும்
என் உயிரின் இறுதி மூச்சுவரை

Wednesday, March 2, 2011

இளங்காலைப் பொழுது

காலைத் தென்றல்
கண்சிமிட்டும் பூக்கள்
கதிரவன் ஒளி
காண்பவர் மனதை
கவர்ந்திழுக்கும் வேளை...!
படித்தவர் முதல்
பாமரன் வரை
பரமனை தொழ
அன்னையவள் இல்லத்தில்
ஆகுதிகள் பரிமாற
பள்ளிச் செல்வங்கள்
துள்ளிச் சென்று
பாடங்கள் படிக்க
பெரியவர் பொறுப்பாய்
பணிகளை தொடர
இனிதே புலர்ந்தது
இளங்காலைப் பொழுது!

பாச பிரிவு

அமைதியான நேரம் - என்
மனது தேடிய நேசம்
அருகில் இல்லாத சோகம்
பனித்தது கண்களில் வந்து
கன்னங்களை வருடி இங்கு
கேள்விகள் கேட்டது நெஞ்சை
விடைகள் தேட எண்ணி
தோற்றது எந்தன் இதயம்
பாசப்பிரிவுகள் இன்று
பந்தாடுது இன்ப நினைவை
வேச நெஞ்சங்கள் மத்தியில்
வேண்டும் உன் பாசம்....!