Sunday, July 31, 2011

இது தான் அன்பா?

தினமும் மணிக்கணக்காய்
தெவிட்டாமல் பேசினாலும்
தீண்டிப் பார்க்கும் உன்
தீராத சில்மிசங்கள்
தித்திப்பாய் இருந்தாலும்
தற்செயலாக நம்
மனங்களையும் ரணப்படுத்தி
காயங்கள் காண்கிறது
ரணங்களை குணமாக்க
மீண்டும் போடும்
கொஞ்சல்களால் கெஞ்சுகிறது
நம் மனது
இது தான் அன்பா?

Sunday, July 24, 2011

கலைந்து போன காதல்


கலைந்து போன காதலுடன்
கனிவான உன் பேச்சை
கண்ணார ரசிக்கும் நான்
காதலில் தோற்கவில்லை
கடைசி வரை தோள் கொடுக்க
கண்ணே நீ நட்பாக
காலம் பூராய் உள்ள போது
காதலில் தோற்ற வலி
எங்கோ ஓர் மூலையில்
கனமாக இருந்தாலும்
காலம் வரை நான் இருப்பேன்
கனிவாக உன்னோடு!

Saturday, July 23, 2011

பிஞ்சின் ஏக்கம்

பாலூட்டி சீராட்ட வேண்டிய
பாசமான என் அன்னை
பாதி வழியிலே
பரிதாபமாய் இறந்து விட்டாள்
பண்பை வளர்க்க வேண்டிய
பாசமிகு என் தந்தை
காணாமல் போனோரின்
பட்டியலில் இணைந்து விட்டார்

பள்ளி செல்லும் வயதில்
படிப்பின்றி நான் இங்கு
பாதையோரமாய்!
இத்தனைக்கும் காரணம்
இனிய என் திருநாட்டில்
இடைவிடாது நடந்த யுத்தம்
சொந்தங்களை தொலைத்த
சோகமான எனக்கு
சொந்தம் என்று சொல்வது
அநாதை என்ற பெயர் மட்டும்!

Thursday, July 21, 2011

ஓர் தொலைபேசி இதயம் பேசுகிறது


என்னை அதிகமாக நேசிக்கும்
என் இனிய உறவுக்கு ஓர்
அனுதாப மடல்
எனக்காக ஒரு நிமிடம்
செவி சாய்ப்பாய் என்ற
எள் அளவு நம்பிக்கையில்!

என்னை என்றும் நீ
அன்போடு அணைக்கிறாய்
ஆசையாய் பார்க்கிறாய்
மகிழ்ச்சி வந்தால்
முத்த மழை பொழிகிறாய்
சோகத்தின் போது
ஏக்கமாய் சாய்கிறாய்
கோவம் வந்தாலோ
இரக்கமின்றி எறிகிறாய்!

உன் செல்ல சிணுங்கல்களை
கேட்டு சிரித்துள்ளேன்
உன் கொஞ்சல் மொழியிலே
உலகையே மறந்துள்ளேன்
உன் இனியவனின் முத்தத்தால்
வெட்கி சிலிர்த்துள்ளேன்
உன் கண்ணீரில் நனைந்து
சிரிப்பலைகளில் காய்ந்துள்ளேன்!

தினமும் உன் விரல்களால்
என்னுடலை தீண்டுகிறாய்
செல்லமாய் நீ தீண்டினால்
தித்திக்குது என் மனது
சற்றே நீ கோவமானால்
வலிக்கிறது என் பொன் மேனி
இருந்தும் உன் விரல்கள்
என்னுடலை நசுக்கிறது!


உன் நட்போடு நீ போடும்
நயமான சண்டைகள்
கிண்டலடித்து கிசுகிசுக்கும்
எண்ணற்ற இரகசியங்கள்
எல்லாமே என்னுள்ளே
எதிரொலித்து கிடக்கிறது
உன்னோடு சேர்ந்து நான் பல
உள்ளங்களை அறிந்து விட்டேன்!

பேச்சினிலே ஒருவர் பற்றி
வரலாறே கூறிடுவேன்
குரல்களின் மாற்றத்தால்
குணங்களையும் சொல்லிடுவேன்
உன் மனதை மட்டுமல்ல
உன் அன்பானவர் மனங்களையும்
ஓர் நொடியில் அறிந்துவிடும்
பக்குவமும் எனக்குண்டு.

உன்னையும் - உன்
உள்ளத்து உறவுகளையும்
புரிந்து பழகியதால்
உரிமையுடன் உன்னிடம்
கோரிக்கை இடுகிறேன்
உன் உற்ற உறவுகளுடன்
ஒரு போதும் இரவினிலே
சண்டை செய்து விடாதே!

நீ போடும் சிறு சண்டையால்
தூக்கம் கெட்டு போவது
உனக்கு மட்டுமல்ல
உன்னோடு சேர்ந்த எனக்கும் தான்!
உன் சமாதான பேச்சிற்காய்
உன்னோடு சேர்ந்திங்கு
இரவிரவாய் விழிப்பது
எத்தனை பெரிய துன்பம்!

உன்னால் என் தூக்கம்
பல இரவுகள் கெட்டுள்ளது
அன்பே இரைஞ்சிக் கேட்கிறேன்
எனக்கு நீ கொடுக்கும்
உணவோடு மட்டுமல்ல
இரவினிலாவது நான்
நிம்மதியாய் தூங்கிட
இடைவேளை தந்துவிடு!

Wednesday, July 20, 2011

நாகரீக பெண்ணே!

பெண்ணே!
நாகரீகம் எனும் பெயரில்
நயமாக உடையணிந்து
நானிலம் எங்கும்
நடைபயிலும் நீ
நாகரீக மோகத்தில்
சம்பிரதாயங்களை
சற்றுக் கவனிக்கவில்லை!

நீ செய்யும் சிறு தவறு
நானிலத்தில் மற்றோரை
நாசூக்காய் நசுக்குவதை
ஏன் தான் நீ இங்கு
அறிய மறந்தாயோ?

திருமண பந்தத்தின்
தீர்க்கமான வெளிப்பாடான
திருமாங்கல்யம் உன்
நெஞ்சினிலே காணவில்லை
காரணம் கேட்டால்
நாகரிக உடைக்கு
ஒத்து போகவில்லை என
சாடை செய்யும் பதில்கள்!

மஞ்சளரைத்து குங்குமமிட்டு
குனிந்து நடக்கும்
குடும்ப பெண்ணே
ஆடை நிறத்தில்
அழகழகாய் வதனமதில்
ஸ்டிக்கர் பொட்டணிந்து
பல வர்ண பூச்சுடன் நீ!

கண்டதும் காதல் கொள்ளும்
காளைகள் பலர் இங்கு
இவள் கன்னியா? இல்லை
வேறோர் கணவனின்
சொந்தமா என்று
கலங்கிப் பார்க்கும்
காலம் இது!

நாகரீக மோகத்தால்
நங்கை நீ மட்டுமல்ல
நேர்மையாய் காதல் செய்ய
காத்திருக்கும் ஆடவரின்
பூவான இதயத்தில்
தீ வைத்து செல்கின்றாய்!

காரிகையே!
கையெடுத்து கும்பிட்டு
கனம் பண்ண வேண்டிய உன்னை
காதல் செய்து கேலி பண்ண
காரணமாகி விடாதே!

வையகம் போற்றிடும்
கோதையே நீ
உன்னை திருத்தி விடு
உனக்காக இல்லாவிடினும்
உண்மையாய் காதல் செய்ய
உலகிவே காத்திருக்கும்
உத்தமமான சில ஆண்களுக்காய்!

Tuesday, July 19, 2011

காதல் தூண்டில்

என் மனசு என்ற சமுத்திரத்தில்

இதயம் எனும் மீன் பிடிக்க

காதல் என்ற தூண்டிலினை

கருத்தோடு போடுகிறாய்

உன் கையில் கிடைக்கையில்

என் இதயத்திற்கு வரும்

காதல் காயத்திற்கு

கருணையோடு நீ இங்கு

மருந்தாவாய் என்ற துணிவில்

தயக்கமின்றி சிக்குகிறேன்

கண்மணியே உன் தூண்டிலுக்குள்!

Thursday, July 14, 2011

இல்லை என்ற வாழ்க்கையில்

என் வாழ்க்கை என்னும்
வானத்தில்
வானவில்கள் வந்ததில்லை
வந்து போன மேகங்கள்
மழைத்துளிகள் தந்ததில்லை

கடந்த கால கவலைகள்
நெஞ்சை விட்டு நீங்கவில்லை
அதை நினைத்து நினைத்து
மனதும் உறங்கவில்லை

நான் ஓய்ந்து போகும் வரை
ஓயாமல் துயரங்கள்
என்னை விடுவதாயில்லை
எனக்கு மட்டும் ஏன் இப்படி
எதுவுமே தெரியவில்லை

இன்னும் இந்த உலகை
நான் முழுதாய் அறியவில்லை
இத்தனை இருந்தும் நான்
இங்கு அழுவதில்லை
சாதிப்பேன் என்ற நம்பிக்கையில்
இன்னும் நான் சாகவில்லை!

தண்டவாளமாய்!

கைதொடும் தூரத்தில்
நாம் இருந்தும்
இறுதி வரை
இணைய முடியா
தண்டவாளமாய்
நம் காதல்!

Monday, July 11, 2011

மனதார நேசிக்கிறேன்

இரவை நேசிப்பவர்கள் பலர்

இரவின் மடியில்

இறுக்கி அணைக்கும்

தலையணையை நட்பாக்கி

இதயத்தின் சுமைகளை

இறக்கி வைப்பார்கள்!


நானோ

மழைத்துளிகளை

மனதார நேசிக்கிறேன்

என் கண்ணோடு கரையும்

கண்ணீர் துளிகளை

கவலையின்றி தன்னுள்

ஒன்றாக்கி கொள்வதால்!


மழையே

என் மழையின் துளியே

மனதார நான் இங்கு

கலங்கி நிற்கும் போது

நொடிகூட தயங்காமல்

என் ஸ்பரிசங்களை

தொட்டு சென்று விடு!


என்னை ஆறுதல் படுத்தும்

இனிய இயற்கையே

உன்னை நான் இங்கு

செயற்கையாய் தேடுவது

சாத்தியமாய் இல்லை!


உன் துளிகளாய் நினைத்து

என் சோகத்தின் முகவரியை

சொல்ல துடிக்கும் என்

கண்களின் அருவிகளை

கண்ணீராய் கையேந்தும்

என் குழியலறை பூங் குழாய்களுக்கு

தற்காலிகமாய் நன்றி சொல்வேன்

மழைத்துளியே நான் உன்னை

மனமார தரிசிக்கும் வரை

எப்படி முடியும்?

அன்பே
உன்னால் மட்டும் எப்படி
உயிரையே தூக்கி போட
ஒரு நொடியில் முடிந்தது

பழகிய நினைவுகளை
பகல் கனவாய் மறந்து
பாசாங்கு பண்ணும் உன்னை
பரிதவிப்பாய் பார்க்கிறேன்

பாசமாய் பேசிடும் உன்
பக்குவமான வார்த்தைகள்
கண் சிமிட்டும் நொடியிலே
கலைந்து தான் போனதேன்

கலைந்து போன என்
கண்ணீர் கனவுகளுடன்
கண்மணியே உனக்காக
காத்திருக்கிறேன் நான்

தோழமையாய் வந்து
தோழோடு அணைப்பாயா
தொட்டாலே பாவம் என்று
தொலைவிலே செல்வாயா?

மறந்து விடாதே

அன்பே!
நம் நட்பு காலத்தின்
நயமான பேச்சுக்கள்
வீணான சண்டைகள்
விதண்டாவாத விவாதங்கள்
உன் விழிகளை நனைத்து
இதயத்தை காயப்படுத்தினால்
மன்னித்து விடு
என்றோ ஒரு நாள்
என் மரணச் செய்தி கேட்டு நீ
நிலைகுலைந்து நிற்கையில்
உன் பிடிவாதங்களை
தொலைத்து விட்டு
என் உடலையாவது
இறுதியாக பார்த்து செல்
ஏனெனில்
நீயாக நினைத்தால் கூட
பின்பு நீ என்னை
பார்க்கவே முடியாது

Friday, July 8, 2011

நேசிப்பு

கருவறையை நேசித்தேன்
பத்து திங்களில் பறிபோனது
பாசத்தை நேசித்தேன்
பணத்தை பார்த்ததும் தடுமாறியது
நிலவை நேசித்தேன்
வெகு தொலைவில் நின்றது
காற்றை நேசித்தேன்
கைக்குள் சிக்க மறுத்தது
மழையை நேசித்தேன்
என்னை தொட்டுவிட்டு சென்றது
இரவை நேசித்தேன்
விடியலை கண்டதும் விடைபெற்றது
கனவை நேசித்தேன்
தூக்கம் கலைந்ததும் கலைந்தது
அன்பே உன்னை நேசித்தேன்
உயிருள்ளவரை இருப்பாய் என்று!