Friday, January 21, 2011

பேருந்தின் குளிரூட்டல்

அன்று என் நண்பன்
ஆசையாய் பயணித்தான்
முழு சொகுசு பேருந்தில்
அன்றோடு அவன் வாழ்வில்
அது மறக்க முடியா
அனுபவமாயிற்று.

பெரிதாக ஒன்றும்
சொல்வதற்கு இல்லை
காரணம்
பேருந்தின் குளிரூட்டல்
அவனால் தாங்க
முடியாமை தான்!

அவனுக்கு வாழ்க்கையில்
ஆயிரம் லட்சியங்கள்
அத்தனையும் தூக்கிபோட்டான்
அந்த நொடியலேயே!
அவன் கனவே வெளிநாட்டில்
மேன்மையான தொழில் பார்ப்பது

அந்த பேருந்து பயணத்தின் குளிர்
அவன் வாழ்க்கையின்
இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி ஆகியது.
இந்த குளிரே இப்படி என்றால்
வெளிநாட்டுக் குளிர்....?

ஐயகோ.....!
ஒரு சொகுசு பேருந்துப் பயணம்
என் இனிய நண்பனின் வாழ்வில்
மறக்க முடியா அனுபவம்......!
அவன் இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி......!
நினைத்துப் பார்க்கவே
கண்கள் பனிக்கிறது!
நட்பே ஒரு குளிர் உன்னை
இப்படி ஆக்கிவிட்டதா.....?

Monday, January 17, 2011

நிறுத்திவிடு உன் சீற்றத்தை......!

துயரோடு வாழ்பவர்க்கு
துயரே தான் வாழ்க்கை என்று
துளிகூட வருத்தமின்றி
கொடுத்து விட்டான் இறைவனும்

ஊணின்றி உறவின்றி
உடுத்திவிட உடையின்றி
உரிமையாய் தோள் சாய
உற்றதுணை ஏதுமின்றி
நிர்கதியாய் நிற்கின்ற
நிகரில்லா உறவுகள்

இயற்கை கூட இவர்களிடம்
இரக்கம் காட்ட மறுக்கிறது
தன்சோகம் தீர்த்து விட
தயக்கமின்றி பொழிகிறது
வான் மழையே போதும் உன்
வரையறையில்லா பொழிவு!

உன்னாலே இங்கு
உயிர்ச்சேதம் ஓராயிரம்
ஆர்ப்பரிக்கும் உன்
ஆவேச வெள்ளத்தை
அடக்கி விடு இத்துடன்
அமைதியை நிலவச்செய்து
அனைவரையும் வாழவை!

இயற்கை அன்னையே
இனிபோதும் உன் சீற்றம்
இனிமையான வாழ்வை
இனிதே நல்கிடு
இப் பூவுலகின்
இனிய நெஞ்சங்களுக்கு!

Friday, January 14, 2011

பொங்கலின் ஏக்கம் ஓர் புதுவசந்தத்திற்காய்.....!

அன்று
செல்வ செழிப்பில்
அன்புச்செல்வங்களுடன்
சீராட்டி சோறூட்டி
சிரித்திருந்த காலத்தில்
விடியலை பார்த்தாலே
நெஞ்சமெல்லாம் புன்னகை!

கதிரவனை வரவேற்க
கை நிறைய நெல்மணிகள்
காலையில் எழுந்து
கண்கவர் கோலமிட்டு
கதிர் குற்றி சூடடித்து
கலகலப்பாய்
பொங்கல் செய்தல்...!

இன்று
காலையின் விடியலே
ரணங்ளை தாங்கி......!
எழுந்த பிஞ்சு
என்னம்மா உணவென்று
ஏக்கத்துடன் கேக்குமென்று!

ஆறுதல் சொல்ல கூட
பெற்றவள் உடலில்
போதிய சக்தி இல்லை
பெற்றவளை புரிய அந்த
பிஞ்சுக்கும் வயது இல்லை
இத்தனைக்கும் உதவ
உறவென்றும் யாருமில்லை!

பட்டினியை பார்த்து
பரிதவிக்கும் உள்ளங்கள்
இன்னும் உள்ளது
இவ் வையத்தின் மூலைகளில்....!
இன்றைய பொங்கலே
இவர்கள் துயரங்ளை
இனிமையோடு தீர்த்துவிடு
இனியாவது பிறக்கட்டும்
இவர்களுக்கு புதுவசந்தம்!


நண்பர்கள் அனைவருக்கும்
நல் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Tuesday, January 11, 2011

புரிந்து கொள் இனியவளே!

அன்பே!
காத்திருப்பது காதலுக்கு
சுகம் என்பார்கள்
ஆனால் நட்பே
உன்னை பிரிந்த
ஒவ்வொரு நொடியும்
ரணமாக அல்லவா
இருக்கிறது எனக்கு
வானிலிருந்து பெய்யும்
மழை கூட
பூமியை தான்
வந்தடைய வேண்டும்
அப்படித் தான்
எம் பாசமும்
புரிந்து கொள் இனியவளே

Wednesday, January 5, 2011

பிறந்தது யார்?

இன்று நீ
புதிதாய் பிறந்தாயா?
இல்லை நாம்
புதிதாய் பிறந்தோமா?
இல்லை
நம் நட்பு, காதல்
புதிதாய் பிறந்ததா?

எதுவுமே புரியவில்லை
இருந்தும் மனதில்
சிறிதாய் ஒரு வருடல்
உள்ளுக்குள் ஓர் நெருடல்
நினைத்துப் பார்க்க
நிசப்தமான நினைவுகள்
நெஞ்சத்தை பிழிந்தாலும்
அது கூட சுகம் தான்

இன்று நம் வாழ்க்கையை
இஷ்டப்பட்டு மாற்றிய
இறைவனை நொந்து
இனி என்ன ஆவது?
நமக்கென்ற வாழ்க்கையை
வாழ்வது தான்
வாழ்வின் சாதூர்யம்

இன்னும் நமக்கு
ஜென்மங்கள் வேண்டும்
அன்றும் நாம்
அன்பு செய்ய வேண்டும்
தண்டவாளங்களாய்
இருந்தல்ல.....
தலைகோதும் துணைகளாக
வாழ்க்கையில் இணைந்து!

Saturday, January 1, 2011

இனிமையோடு வா.........!

அன்பு உறவே
அமைதியாய் வந்திடு
ஆர்ப்பரிக்கும் உள்ளங்களுக்கு
ஆறுதல் கொடுத்திடு

இனிய உறவே
இரு கரம் கூப்பி
இசைக்கிறேன்
இனிமையோடு வா

இல்லங்கள் தோறும்
இன்பத்தை பரப்பிடு
இருளினை போக்கி
இன்னல்கள் தீர்த்திடு

ஈன்றவர் வாழ்க்கையில்
இன்பத்தை ஊட்டிடு
உயர்வாய் வாழ
ஊக்கத்தை தந்திடு

எண்ணுவதெல்லாம்
ஏணிப்படிகளாய்
ஒன்று சேர்ந்திட
வழி சமைத்திடு

உன் ஆரம்பம்
உலகுக்கு ஓர்
புதிய அத்தியாயமாய்
திகழ்ந்திட அருளிடு..!